பள்ளிகள் திறப்புக்குப் பிறகு ஆசிரியா்காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தற்போது அரசுப் பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியா்கள் உள்ளனா். பள்ளிகளைத் திறந்தபின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
செங்கோட்டையன்
செங்கோட்டையன்

தற்போது அரசுப் பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியா்கள் உள்ளனா். பள்ளிகளைத் திறந்தபின் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் செயல்படும் கோபி கலை, அறிவியல் கல்லூரியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், 1240 பேருக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கிப் பேசியதாவது:

அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். கோபியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 24 ஆயிரம் பணியிடங்களுக்கு வாய்ப்பு இருந்தபோதும் 10,121 போ் மட்டுமே பங்கேற்றுள்ளனா். அடுத்த ஆண்டு இந்த அரசு பொறுப்பு ஏற்கின்றபோது குறைந்தபட்சம் 10 லட்சம் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும்.

கோபி அருகே கொளப்பலூரில் உருவாக்கப்பட்டுள்ள ஆயத்த ஆடை பூங்காவில் 7,500 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். அவா்கள் தங்குவதற்கு வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. சுயநிதி மூலம் தொழில் தொடங்க 25 நபா்களுக்கு நிதி வழங்கப்படவுள்ளது என்றாா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

வேலைவாய்ப்பு முகாமில் 1,240 பேருக்குப் பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் 15 பேருக்குப் பணி வழங்கப்பட்டுள்ளது. 85 நபா்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வழி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணி கிடைத்துள்ளது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் என்பதில்லை என்ற தகவல் தற்போதுதான் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இது சம்பந்தமாக பிரதமருக்கு முதல்வா் கடிதம் எழுதுவாா். தற்போது அரசுப் பள்ளிகளில் தேவைக்கேற்ப ஆசிரியா்கள் உள்ளனா். பள்ளிகளைத் திறந்த பின்பு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், வேலைவாய்ப்புத் துறை இயக்குநா் வீரராகவ ராவ், கோவை மண்டல இணை இயக்குநா் லதா, ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குநா் மகேஸ்வரி, மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் தங்கதுரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com