திருச்சி: தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டையில் தடையை மீறி தனது கட்சி சார்பில் புதன்கிழமை நடைபெற இருந்த பேரணி, பொதுக் கூட்டத்துக்குச் சென்று கொண்டிருந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் திருச்சியில் புதன்கிழமை கைது செய்யப்பட்டு நள்ளிரவில் விடுவிக்கப்பட்டார் .
கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேட்டைவாய்த்தலை சோதனைச் சாவடி வழியாக அர்ஜுன் சம்பத் வந்த காரை மாவட்ட போலீஸôர் தடுத்து, முன்னெச்சரிக்கையாக அவரைக் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதையறிந்த அக்கட்சியின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதல்வர் தலையிட வேண்டும்: இதையடுத்து செய்தியாளர்களிடம் அர்ஜுன் சம்பத் கூறுகையில், தஞ்சை மாவட்டம், பாபநாசம் தொகுதிக்குள்பட்ட அய்யம்பேட்டை பகுதியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு அனுமதி வழங்காமல், தடை விதித்து, இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் தஞ்சை முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்யவும், இந்து மக்கள் கட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்கவும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றார்.