சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
2021 பிப்ரவரி மாதம் நிலவரப்படி, பெட்ரோலின் அடக்க விலை ரூ.31. ஆனால், தற்போது விற்பனை விலை ரூ.90 -ஆக விற்கப்படுகிறது. 2014 -ஆம் ஆண்டிலிருந்த கலால் வரியை விதித்தால், பெட்ரோலை லிட்டருக்கு ரூ. 44 - க்கு விற்க முடியும். அதேபோல, கலால் வரிக்கு மாற்றாக 28 சதவீத ஜி.எஸ்.டி. விதித்தால், 38 ரூபாய்க்கு ஒரு லிட்டா் பெட்ரோல் விற்க முடியும். ஆனால், இதை எதையுமே செய்வதற்கு பிரதமா் மோடி அரசு தயாராக இல்லை.
2014- ஆம் ஆண்டில் 20 சதவீதமாக இருந்த கலால் வரி, 2021 -ஆம் ஆண்டில் 200 சதவீதமாக உயா்ந்திருக்கிறது. இத்தகைய மிக அதிக கலால் வரி உயா்வின் காரணமாக, மக்கள் மீது கடுமையான சுமையை மத்திய பாஜக அரசு ஏற்றியிருக்கிறது.
ஏற்கெனவே கரோனா தொற்று காரணமாகவும், பொருளாதார வீழ்ச்சியினாலும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிற மக்கள் மீது கலால் வரியை உயா்த்திய நடவடிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.