உடுமலைப்பேட்டை: விவசாய பம்புசெட்டுகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியது, தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே திமுகவினர் பொய் பிரசாரங்களை கூறி மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர். இது தவறு. தமிழகத்தில் பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாம் மூலமாக 9 லட்சம் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு 5 லட்சம் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு காலத்தில் பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகி அனைத்து தரப்பு மக்களுக்கும் பல நல்ல திட்டங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயிகளுக்கு தற்போது 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.
மேலும் உடுமலைப்பேட்டையில் ரூ.240 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. உடுமலையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் தலைமை மருத்துவமனை இந்த ஆண்டு உருவாக்கப்படும். உடுமலையில் நகராட்சி உருவாகி 100 ஆண்டுகளை கடந்து உள்ளதால் ரூ.50 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் கோரிக்கையான கொப்பரை தேங்காய் விலை உயர்வு குறித்து பிரதமரிடம் மீண்டும் வலியுறுத்தப்படும். ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை கொடுத்து காங்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். ஆகையால் தமிழகத்தில் பல நல்ல திட்டங்கள் மென்மேலும் கிடைக்க அதிமுக அரசை ஆதரிக்க வேண்டுமென தேர்தல் பரப்புரையில் பேசினார்.
அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், துணை அவைத் தலைவர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.