பாவூர்சத்திரம் : தோரணமலை முருகன் கோவிலில் விவசாயம் செழிக்க வேண்டி வருண கலச பூஜை நடைபெற்றது.
தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி விவசாயம் தழைக்க வேண்டி வருண கலச பூஜை வெள்ளிக்கிழமை (பிப்.12) நடைபெற்றது.
விவசாயம் தழைக்க வேண்டி மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வரும் முருக பக்தர்கள்.
இதற்காக முருக பக்தர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் மலை உச்சியில் உள்ள சுனையில் இருந்து கிரக குடம் எடுத்து வந்தனர். தொடர்ந்து சப்த கன்னியர்கள், விநாயகர் மற்றும் தெய்வங்களுக்கும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன் மற்றும் முருகருக்கு சிறப்பு அபிசேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் செண்பகராமன் தலைமையில் செய்து இருந்தனர்.