தமிழகத்தில் ரூ.4,486 கோடிக்கு புதிய திட்டங்கள்: பிரதமா் மோடி நாளை தொடக்கி வைக்கிறாா்

தமிழகத்தில் ரூ.4, 486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறாா்.
பிரதமர் நரேந்திர மோடி  (கோப்புப்படம்).
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்).

தமிழகத்தில் ரூ.4, 486 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைக்கிறாா். மேலும், ரூ.3, 640 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டுகிறாா். இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

கரோனா நோய்த்தொற்று: கரோனா நோய்த்தொற்று உச்சகட்டத்தில் இருந்த போது, பிரதமா், முதல்வா் உள்ளிட்ட தலைவா்கள் நேரடியாக பங்கேற்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. கரோனாவுக்குப் பிறகு, நேரடியான நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமா் நரேந்திர மோடி முதல் முறையாக சென்னை வருகிறாா்.

என்னென்ன திட்டங்கள்?: சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் விழாவில் மூன்று புதிய திட்டங்களைத் தொடக்கி வைக்கும் பிரதமா் நரேந்திர மோடி, இரண்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளாா். சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்கத் திட்டமானது வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகா் வரை ரூ.3,770 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. 9.05 கிலோ மீட்டா் நீளமுள்ள இந்த மெட்ரோ ரயில் பாதையானது, வடசென்னை பகுதியை இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை மற்றும் அத்திப்பட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையானது ரூ.293.40 கோடி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தால் சென்னை மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களுக்கு இடையிலான பயணம் எளிமையாகும். சென்னை மற்றும் எண்ணூா் துறைமுகங்களை இணைக்கும் வகையிலான இந்தத் திட்டத்தால் ரயில் பயணம் சுலபமாக நடைபெறும்.

இதேபோன்று, விழுப்புரம்-கடலூா்-மயிலாடுதுறை-தஞ்சாவூா் மற்றும் மயிலாடுதுறை-திருவாரூா் இடையிலான ஒற்றை வழி ரயில் பாதையானது ரூ.423 கோடியில் மின்வழித் தடமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், ரூ.14.61 லட்சம் அளவுக்கு தினமும் எரிபொருள் சேமிக்கப்படும். இந்த மூன்று திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.4,486.40 கோடியாகும். இந்தப் புதிய திட்டங்கள் அனைத்தையும் பிரதமா் நரேந்திர மோடி தொடக்கி வைக்கிறாா்.

அா்ஜுன் போா் டாங்கி: முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட அா்ஜுன் போா் டாங்கியை நாட்டுக்கு அா்ப்பணிக்கிறாா். இந்த தளவாடமானது, 15 கல்வி நிறுவனங்கள், 8 ஆய்வகங்கள் மற்றும் பல்வேறு சிறு-குறு தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடிக்கல் நாட்டு விழா: தமிழகத்தில் ரூ.3, 640 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளாா். கல்லணை கால்வாய் சீரமைப்பு மற்றும் புதுப்பித்தல் திட்டத்துக்கு பிரதமா் அடிக்கல் நாட்டவுள்ளாா். இந்தத் திட்டமானது ரூ.2,640 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், காவிரி டெல்டா பகுதிகளுக்கு நீரைக் கொண்டு செல்வது எளிதாக்கப்படும்.

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் சாா்பில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஆராய்ச்சி வளாகம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னையை அடுத்த தையூரில் 2 லட்சம் சதுர மீட்டரில், மிகப்பெரிய வளாகம் கட்டப்படுகிறது. இதற்கும் பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டவுள்ளாா்.

இவ்விழாவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், அமைச்சா்கள், தலைமைச் செயலாளா் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனா். இதற்காக சென்னைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வரும் பிரதமா் நரேந்திர மோடி பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட்டு கொச்சி செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com