ராணிப்பேட்டையில் விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் திருத்தச் சட்ட மசோதாக்களைத் திரும்பப் பெற வேண்டும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் அனைத்தும் நிபந்தனைகள் இன்றி தள்ளுபடி செய்ய வேண்டும், 60 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும், அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சாலை அமைக்கும் திட்டத்துக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதைக் கைவிட வேண்டும், தென்பெண்ணை - பாலாறு உள்ளிட்ட தென்னக நதிகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும், பாலாறு மாசடைவதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாயச் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.