திருத்தணி முருகன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா, புதன்கிழமை இரவு விநாயகர் திருவீதியுலாவுடன் தொடங்கியது.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது. பன்னிரன்டு நாள்கள் நடக்கும் இவ்விழாவில் உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தினமும் ஒரு வாகனத்தில் காலை, மாலை என இரு வேளைகளில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அந்த வகையில், இந்தாண்டின் பிரம்மோற்சவ விழா புதன்கிழமை இரவு விநாயகர் திருவீதியுலாவுடன் தொடங்கியது.
இதையடுத்து வியாழக்கிழமை காலை 8:30 முதல் 9:30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் எதிரே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து உற்சவப்பெருமானுக்கு தீபாராதனை நடந்தது.
சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் எதிரே வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்த முருகப்பெருமான்.
வரும், 24 ஆம் தேதி மர தேர் திருவிழாவும், 25 ஆம் தேதி வள்ளி திருக்கல்யாணம் நடக்கிறது. இம்மாதம், 27 ஆம் தேதி கொடி இறக்கம், தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக எளிய முறையில், பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறுகிறது. கொடியேற்றும் விழாவில் கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் பழனிக்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.