திருவள்ளூர்: மதுகடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் திருந்தி வாழவும், அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் ரூ.28.80 லட்சம் மதிப்பில் 76 பயனாளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கறவை பசுகளை ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் ஆகியோர் வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மது கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் திருந்தி வாழ முயற்சிப்பதாக உறுதிமொழி அளித்தனர். அதைத் தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் தொழில் செய்வதற்கு உதவி செய்யவும் மதுவிலக்கு அமலாக்க பிரிவுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அதன் அடிப்படையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் திருந்த வாழ வாய்ப்பு அளிக்கும் வகையில் கோரிக்கையை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவினர் ஏற்றுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்தனர்.
இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் திருந்தி வாழ முயற்சிப்போருக்கு கால்நடைகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் பா.பொன்னையா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.அரவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கறவை மாடுகளை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ரூ.28.80 லட்சம் மதிப்பில் 76 பயனாளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கறவை பசுகளை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மீனாட்சி, செந்தில், காவல் ஆய்வாளர் சத்யபாமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அமலாக்கப்பிரிவினர் செய்திருந்தனர்.