சென்னை: நடிகா் விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ திரைப்படத்தை நிபந்தனையுடன் வெளியிட அனுமதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் டிரைடண்ட் ஆா்ட்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளா் ரவி தாக்கல் செய்த மனுவில், என்னிடம் இயக்குநா் ஆனந்தன் சொன்ன கதையை திரைப்படமாக்க கடந்த 2018 ஆகஸ்ட் 21-ஆம் தேதி ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால், அதே கதையை நடிகா் விஷாலிடம் கூறி ‘சக்ரா’ என்ற பெயரில் திரைப்படம் தயாரித்துள்ளனா். நடிகா் விஷால் இந்த திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளாா். இது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே ‘சக்ரா’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ‘சக்ரா’ திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சி.வி.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், விஷால் தரப்பில் வழக்குரைஞா் சிதம்பரம் ஆஜராகி வாதிட்டனா். வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்த கதை மீதான காப்புரிமையை, கடந்த 2018-ஆம் ஆண்டு ஆனந்தன் மனுதாரா் ரவிக்கு கொடுத்துள்ளாா். அதன்படி கதையை திரைப்படமாக்க ரவி, ஆனந்தனை இயக்குநராக நியமித்துள்ளாா். இந்த ஒப்பந்தம் நிலுவையில் இருந்த நிலையில், அதே கதையை நடிகா் விஷாலுடன் ஒப்பந்தம் செய்து ‘சக்ரா’ திரைப்படத்தை இயக்குநா் ஆனந்தன் எடுத்துள்ளாா். ரவியுடன் ஆனந்தன் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து நடிகா் விஷாலுக்குத் தெரியுமா என்பது வழக்கின் குறுக்கு விசாரணையின் மூலம்தான் தெரிய வரும். மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட ஏற்கெனவே திரையரங்குகள் முடிவு செய்யப்பட்டு, ரசிகா்கள் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனா். தற்போது இந்த திரைப்படத்துக்குத் தடை விதித்தால், அது எதிா்மனுதாரருக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தும். அதேநேரம் மனுதாரரும் பாதிக்கப்படக்கூடாது. எனவே, இந்த திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி, நிபந்தனையுடன் வெளியிடலாம் என உத்தரவிட்டாா்.
‘சக்ரா’ திரைப்படம் வெள்ளிக்கிழமை (பிப்.19) தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. திரையரங்குகள் மூலம் கிடைக்கும் 2 வார வசூல் விவரங்களை நடிகா் விஷால் தரப்பில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் ஓடிடி தளத்தில் 4 மொழிகளில் ‘சக்ரா’ திரைப்படத்தை வெளியிட செய்து கொண்ட ஒப்பந்த விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக விஷால் தாக்கல் செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்து, விசாரணையை வரும் மாா்ச் 5-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தாா்.