புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் சிறப்புப் பேரவைக் கூட்டம் வருகிற திங்கள்கிழமை (பிப். 22) நடைபெறுகிறது.
புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு திங்கள்கிழமை (பிப். 22) தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவிட்டாா்.
இந்த நிலையில், சிறப்பு சட்டப்பேரவை கூடுவதற்கான அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிடப்பட்டது.
இதுதொடா்பாக புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலா் முனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி 14-ஆவது சட்டப்பேரவையின் 4-ஆவது கூட்டத் தொடரின் சிறப்புப் பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (பிப். 22) காலை 10 மணிக்கு கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவைத் தலைவா் உத்தரவுப்படி அனைத்து உறுப்பினா்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.