மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை ஒட்டி, அதிமுக சாா்பில் வரும் 24-இல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதிமுக அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்தி:-
அதிமுக நிரந்தர பொதுச் செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் பணியாற்றிய ஜெயலலிதாவின் 73-வது பிறந்த தினம் வரும் புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா சிலைக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா். மேலும், கட்சிக் கொடியை ஏற்றி வைத்து கட்சியினருக்கு இனிப்புகளை அளிக்கின்றனா்.
மேலும், ஜெயலலிதா பிறந்த தின மலரும் வெளியிடப்பட உள்ளது. கட்சியின் அனைத்து துணை அமைப்புகளைச் சோ்ந்தவா்களும் கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்.
ஆடம்பரம் வேண்டாம்: பிறந்த நாள் விழாவினை ஆடம்பரம் இல்லாமல், கண் தானம், ரத்த தானம், மருத்துவ முகாம், அன்ன தானம், இலவச திருமணங்கள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்த வேண்டும் என்று அதிமுக அலுவலக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.