சென்னை: புதுச்சேரியில் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து திங்களன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு திங்களன்று காலை அவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவிருந்த நிலையில், நேற்று தட்டாஞ்சாவடி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினரான வெங்கடேசன் திடீரென்று பதவியை ராஜிநாமா செய்தார். இதன்காரணமாக ஏற்கனவே அபாயத்தில் இருந்த நாராயணசாமியின் அரசு கவிழ்வது உறுதியானது. பின்னர் திங்கள் காலை நாராயணசாமி தனது பதவியினை ராஜிநாமா செய்தார்.
இந்நிலையில் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து திங்களன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளரான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ;புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் க.வெங்கடேசன், கழகக் கட்டுபாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.