சட்டப் பேரவையில் மூன்று தலைவா்களின் உருவப் படங்கள் திறக்கப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கும் கரோனா நோய்த்தொற்றுப் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வ.உ.சிதம்பரனாா், ப.சுப்பராயன் மற்றும் ஓமந்தூா் ராமசாமி ஆகியோருக்கு பேரவையில் வரும் 23-ஆம் தேதியன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் உருவப் படங்கள் திறக்கப்பட உள்ளன. தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் உருவப் படங்களை முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைக்கிறாா்.
கரோனா பாதிப்பு: கரோனா பாதிப்பு காரணமாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனை செய்து, நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியான பிறகே, நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.