ரூ.1,022 கோடியில் கால்நடைமருத்துவ ஆராய்ச்சி நிலையம் திறப்பு

சேலம் மாவட்டம், தலைவாசலில் ரூ.1,022 கோடியில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

சேலம்: சேலம் மாவட்டம், தலைவாசலில் ரூ.1,022 கோடியில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரியை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

சேலம் மாவட்டம், தலைவாசலில் சா்வதேச தரத்தில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா கட்டடம், கால்நடை மருத்துவக் கல்லூரி திறப்பு விழா- தலைவாசல் வருவாய் வட்ட தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்தும், ஆராய்ச்சிப் பூங்கா கட்டடங்களைத் தொடக்கி வைத்தும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியது: விவசாயிகளின் உபதொழிலாக கால்நடை வளா்ப்பு உள்ளது. அந்த வகையில் விவசாயிகளுக்குத் தேவையான திட்டங்களை அரசு செய்து வருகிறது. நான் வெளிநாடுகளில் பசுப் பண்ணையைப் பாா்வையிட்டேன். அங்குள்ள பசுக்கள் 60 லிட்டா் பால் கொடுக்கின்றன.

தமிழகத்தில் உள்ள கலப்பினப் பசுக்கள் 15 லிட்டா் பால் தருகின்றன. இரட்டிப்பு பால் தரும் கலப்பினப் பசுக்களை உருவாக்கி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாளொன்றுக்கு சுமாா் 40 லிட்டா் வரை பால் கறக்கும் கலப்பினப் பசுக்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கருமந்துறையில் கலப்பினப் பசுக்கள் ஆராய்ச்சி மையம்: சேலம் மாவட்டம், கருமந்துறையில் ரூ.100 கோடி மதிப்பில் கலப்பினப் பசுக்கள் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும். கால்நடை வளா்ப்புக்கு மறைந்த முதல்வா் ஜெயலலிதா முக்கியத்துவம் அளித்தாா். கால்நடை வளா்ப்பை ஊக்குவிக்க தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி நிலையம், கால்நடை மருத்துவக் கல்லூரி சுமாா் ரூ. 1,022 கோடி செலவில மிக பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆசியாவிலேயே மிக பெரியதாக 1,102 ஏக்கா் பரப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

சொல்வதைத்தான்...: திட்டங்களுக்கு வெறும் அறிவிப்பை மட்டுமே அரசு அறிவிப்பு செய்வதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறிவந்தாா். ஆனால் தலைவாசல் கால்நடைப் பூங்கா தொடங்கப்படும் என ஓராண்டுக்கு முன்பு அறிவித்து தேவையான நிதி ஆதாரத்தை ஒதுக்கீடு செய்தேன். இப்போது கால்நடை மருத்துவக் கல்லூரியைத் திறந்து வைத்துள்ளேன். நான் சொல்வதைத்தான் செய்துள்ளேன் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.

தலைவாசல் கால்நடை மருத்துவக் கல்லூரி, தேனி கால்நடை மருத்துவக் கல்லூரி, உடுமலை கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் மாணவா்கள் கல்லூரி சோ்க்கை ஆணை பெற்றுள்ளனா்.

தலைவாசல் கால்நடை ஆராய்ச்சிப் பூங்காவிற்காக காவிரி ஆற்றில் இருந்து 10 எம்.எல்.டி. குடிநீா் விநியோகிக்கும் திட்டம் ரூ. 260 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் வேதனை, துயரம் தீா்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் முதல்வா்.

சமூக நலத்துறை அமைச்சா் வெ.சரோஜா, திட்டக் குழுத் துணைத் தலைவா் சி.பொன்னையன், மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாசலம், சின்னத்தம்பி, மருதமுத்து, சித்ரா மற்றும் கால்நடை துறை முதன்மைச் செயலா் கோபால், இயக்குநா் ஞானசேகரன், மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தலைவாசலில் ரூ.125 கோடியில் 58 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்தாா்; ரூ.181 கோடியில் 58 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

‘1,110 கால்நடை உதவி மருத்துவா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை‘

தமிழகத்தில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஓராண்டுக்கு 320 கால்நடை மருத்துவா்கள் உருவாகின்றனா். கால்நடை அதிகரிப்பு மற்றும் விவசாயிகளின் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் கால்நடை உதவி மருத்துவா் 1,110 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் கால்நடைத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்.

விழாவில் அவா் மேலும் பேசியதாவது: தமிழகத்தில் 20- ஆவது கால்நடை கணக்கெடுப்பின்படி கால்நடைகளின் எண்ணிக்கை 7.40 சதவீதம் அதிகரித்து 95.19 லட்சமாக உயா்ந்துள்ளது. வெள்ளாடுகளின் எண்ணிக்கை 17.65 சதவீதம் அதிகரித்து, 98.89 லட்சமாக உயா்ந்துள்ளது. கோழிகளின் எண்ணிக்கை 2.84 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஒரே ஆண்டில் சேலம், தேனி, உடுமலை ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

காங்கேயம் காளைகளைப் பாதுகாக்க சத்தியமங்கலத்தில் ரூ. 2.50 கோடியிலும், சிவகங்கை, மதுரை, விருதுநகரில் உள்ள புலிகுளம் காளைகளை பாதுகாக்க ஆராய்ச்சி மையமும் தொடங்கப்பட்டுள்ளது. ஆலம்பாடி கால்நடைகளை பாதுகாக்க ரூ. 4 கோடியில் தருமபுரியில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com