திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா ஏழாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை சுவாமி சண்முகர் வெட்டி வேர்ச் சப்பரத்தில் எழுந்தருளினார்.
இக்கோயிலில் மாசித்திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் நாள்தோறும் சுவாமி, அம்மன் காலை, மாலை வேளைகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். முக்கிய திருநாளான செவ்வாய்க்கிழமை ஏழாம் திருவிழாவை முன்னிட்டு, கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.
காலை 4.30 மணியளவில் அருள்மிகு சண்முகப்பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து 8.30 மணிக்கு ஆறுமுருகப்பெருமான் வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்த பெருமக்களுக்கு ஏற்ற தரிசனம் அருளி பிள்ளையன்கட்டளை மண்டபத்தைச் சேர்ந்தார். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.