திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மன வளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில் மனநல மருத்துவர் பரிசோதனை செய்தார்.
கூத்தாநல்லூர் அடுத்த பனங்காட்டாங்குடி, தமிழர் தெரு மற்றும் குடிதாங்கிச்சேரி உள்ளிட்ட இரண்டு இடங்களில், தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற, மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியை நிறுவனர் ப.முருகையன் மற்றும் மேற்பார்வையாளர் மகேஸ்வரி முருகையன் ஆகியோர் கவனித்து வருகின்றனர்.
மேலப்பனங்காட்டாங்குடியில், 13 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும், குடிதாங்கிச்சேரியில் 14 வயதுக்கு மேற்பட்டவர்களுமாக இரண்டு இடங்களிலும், மன வளர்ச்சிக் குன்றிய 70 பேர் உள்ளனர்.
மேலப்பனங்காட்டாங்குடியில், செவ்வாய்க்கிழமை, மனநல மருத்துவர் என். நாகனிகா, மனநலம் குன்றிய அனைவரையும் அழைத்து, ஒவ்வொருவராகப் பரிசோதனை செய்தார். அப்போது, நிறுவனர் முருகையன் மற்றும் மகேஸ்வரியிடம் மாணவர்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் பற்றியும் கேட்டறிந்தார்.
மேலும், இரவில் தூங்குகிறார்களா, இழுப்பு வருகிறதா என்பன உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார். சோதனையின்போது, மன நலப் புள்ளி விவர பதிவாளர் எஸ்.கோடீஸ்வரன் பங்கேற்றார்.