கந்தர்வகோட்டை அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை அருகே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததைக் கண்டித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கந்தர்வகோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல்லினை நேரடியாக விற்று வந்தனர். இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையம் செயல்படாமல் திடீரென்று மூடப்பட்டதாகவும் இது தெரியாமல் விவசாயிகள் பல நூறு மூட்டை நெல்களை இந்த கொள்முதல் நிலையத்தில் இறக்கி வைத்து, இரவுபகலாகப் பாதுகாத்து வந்தனர்.
அதிகாரிகளிடம் நெல்லை எடுத்துக்கொள்ளக் கூறியும், சரிவர பதில் அளிக்காததால் விரக்தியடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுக்கோட்டை, கந்தர்வகோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளர் எஸ். சிங்காரவேல், வட்டாட்சியர் சி. புவியரசன், கிராம நிர்வாக அலுவலர் அங்க.வீரபாண்டியன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை செய்து உடனடியாக விவசாயிகளின் நெல்களை எடுத்துக் கொள்ள உத்தரவாதம் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். விவசாயிகளின் சாலை மறியலால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.