தனிநபர் மற்றும் கோயில்களில் உள்ள யானைகளைப் பராமரிக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது? எனக் கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி இரண்டு யானைகளும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. இந்த இரண்டு யானைகளையும் கவனித்து வந்த யானைப் பாகனை பணியிலிருந்து நீக்கி விட்டனர். இந்த யானைகள் உரிய விதிகளைப் பின்பற்றிப் பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் யானைகளுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது.
தற்போது யானைகளைக் கவனித்து வருபவர் யானைப் பாகன் கிடையாது. எனவே அந்த யானைகளைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான காரணங்கள் இல்லாமல் ஸ்ரீரங்கத்தில் யானை பாகன்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், யானைகளை சித்ரவதை செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். விலங்குகளிடம் கருணை காட்டாத ஒருவனுக்கு நாமும் கருணை காட்டக்கூடாது எனக் கருத்து தெரிவித்தனர்.
பின்னர், தனியார் மற்றும் கோயில்களில் வளர்க்கப்படும் யானைகள் முறையாகப் பராமரிக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய கொள்கை மற்றும் விதிமுறைகளை வகுக்க வேண்டும். இதுதொடர்பாக 8 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.