மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் அதிமுகவினர் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி புதன்கிழமை கொண்டாடினர்.
அதிமுக மாவட்டச் செயலாளரும், அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஊர்வலமாகச் சென்று பேருந்து நிலையம் அருகேயுள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தாமரைக்குளம் ஊராட்சித் தலைவர் பிரேம்குமார், கட்சியின் மாவட்ட மாணவரணிச் செயலர் ஒ.பி.சங்கர், அரியலூர் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் கள்ளக்குறிச்சி பாஸ்கர், முன்னாள் அரசு வழக்குரைஞர் சாந்தி, அரியலூர் அதிமுக நகரச் செயலர் ஓ.பி.செந்தில், அவைத் தலைவர் கணேசன், ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்ரமணியன்(வ), செல்வராஜ்(தெ),மகளிர் அணி ஜீவாஅரங்கநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக வழக்குரைஞர்கள் பிரிவு...
அரியலூர் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு அதிமுக வழக்குரைஞர் பிரிவு சார்பில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு அரசுத் தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு வழக்குரைஞர் பிரிவு மாவட்டச் செயலர் வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். அரசு வழக்குரைஞர்கள் சண்முகம், ராமுகோவிந்தராஜன், திருவாசகம், எட்மன்ட் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தர்.
அரசு சிமென்ட் ஆலை...
அரசு சிமென்ட் ஆலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கட்சி கொடியை ஏற்றி வைத்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். விழாவில் அண்ணா தொழிற் சங்கத் தலைவர் கு.ராஜேந்திரன், செயலர் தங்கவேல், பொருளாளர் சீனிவாசன், சிமென்ட் லோடிங் அண்ணா தொழிற் சங்க செயலர் க.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதே போன்று அரியலூர் சுப்பிரமணியசுவாமி கோயில், பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அரியலூரிலுள்ள 18 கூடத்துகளிலும் கிளைக் கழகம் சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
ஜயங்கொண்டம்....
ஜயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி உள்ளிட்ட பகுதியில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்துக்கு ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜெ.கே.என்.இராமஜெயலிங்கம் மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கினார்.
தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற விழாவுக்கு ஒன்றியக் குழுத் தலைவர் மகாலட்சுமி தலைமை வகித்தார்.
செந்துறை...
செந்துறையில் நடைபெற்ற விழாவில் ஒன்றிய செயலர் சுரேஷ் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.