போடியில் புதன்கிழமை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
போடியில் மறைந்த முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. முன்னாள் பொதுச் செயலருமான ஜெ.ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் ஜெயலலிதாவின் உருவ படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொங்கல் வைத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
போடி கிராம பகுதியிலும், தேவாரம் பகுதியிலும் ஜெயலலிதாவின் பிறந்த தினம் அ.தி.மு.க, அ.ம.மு.க. வினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. போடி அருகே கொட்டகுடி மலை கிராமத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த தின விழாவில் மலைவாழ் மக்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை பொருளாளர் குறிஞ்சி மணி பங்கேற்று வேட்டி சேலைகளை வழங்கினார்.
ஜெயலலிதா பிறந்த தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் இருசக்கர வாகன பேரணியும் நடத்தினர். பின்னர் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற பாடுபடப் போவதாக உறுதிமொழி ஏற்றனர்.