புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருந்த வி.நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்ததால் கடந்த பிப்.22 ராஜிநாமா செய்தது.
தற்போது வேறு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க உரிமை கோராததாலும் சட்டமன்ற தேர்தல் நெருங்குவதாலும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்துறைக்கு அறிக்கை அளித்தார்.
அதாவது, புதுச்சேரி சட்டபேரவையை அரசியல் சாசனப் பிரிவு 329 மற்றும் யூனியன் பிரதேச பிரிவு 51 உடன் ஆட்சியை கலைக்க பரிந்துரை செய்து அறிக்கை அளித்தார்.
இன்று புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்த அறிக்கையை பரிசீலனை செய்தது. ஆளுநர் அறிக்கையின் அடிப்படையில் புதுச்சேரி சட்டப்பேரவையைக் கலைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
மேலும் புதுச்சேரி சட்டபேரவையை கலைக்க குடியரசுத் தலைவருக்கும் அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. மத்திய அமைச்சரவை பரிந்துரையை குடியரசுத்தலைவர் ஏற்று இன்றே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.