வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா மற்றும் பெண் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்ரவரி 24-ம் தேதி, மாநில பெண் குழந்தைகள் தினமாக கொண்டாடி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில், மாநில பெண் குழந்தைகள் தின விழா மற்றும் பெண் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, வட்டார குழந்தைகள் நல அலுவலர் வை.அருள்மொழி தலைமை வகித்தார்.
மேற்பார்வையாளர் பத்மா வரவேற்றார். பேளூர் அரசு மருத்துவர் கார்த்திகா, பெண் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினர் பெ.பெரியார்மன்னன், வட்டார ஒருங்கிணைப்பாளர் செ.கீர்த்திகா தேவி, வட்டார சுகாதார செவிலியர் ராணி ஆகியோர், பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பெண் கல்வி, குழந்தை திருமணம், பெண் சிசுக்கொலை, கருக்கலைப்பு தடுப்பு, தாய்ப்பால் புகட்டலின் முக்கியத்துவம், பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் குறித்து கருத்துரை வழங்கினர்.
திட்ட உதவியாளர் மு.தினேஷ், மேற்பார்வையாளர்கள் ரா. ஜானகி, மு.பத்மாவதி மற்றும் வாழப்பாடி வட்டார அங்கன்வாடி மைய பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக, விழாவில் பங்கேற்ற அனைவரும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.