நாமக்கல் மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் இயக்கம்

அரசுக்கு எதிரான போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்
நாமக்கல் மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் வழக்கம்போல் இயக்கம்


நாமக்கல்: அரசுக்கு எதிரான போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் வியாழக்கிழமை காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 90 சதவீத பேருந்துகள் வழக்கம்போல் இயங்கி வருகிறது.

தமிழக அரசு 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக இறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்கள்  பிப்.25 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. இந்த நிலையில் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும் என்பதில் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் 1, 2 பணிமனைகள், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய பணிமனைகளில் சுமார் 472 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப பணியாளர்கள், மாற்று பணியாளர்கள் என்ற அடிப்படையில் 2 ஆயித்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்பது தொடர்பாக அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களிடம் அந்தந்த பணிமனை அதிகாரிகள் கடந்த இரு நாள்களாக எழுத்துப் பூர்வமான கடிதம் பெற்றுள்ளனர். சம்மந்தப்பட்டவர்கள் வியாழக்கிழமை முதல் பணிக்கு வராதபட்சத்தில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை, ஊதிய பிடித்தம் மற்றும் பணியிடை நீக்கம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் 4 பணிமனைகளிலும் 90 சதவீத பேருந்துகள் இயங்கின. அண்ணா தொழிற்சங்கத்தை தவிர்த்து மீதமுள்ள தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென பணிமனைகள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் பணிமனை அதிகாரிகள் கூறியதாவது; அரசு பேருந்துகளை நிறுத்தாமல் இயக்க முடிவு செய்துள்ளோம். மாவட்டம் முழுவதும் 90 சதவீத பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகின்றன.  வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கத்தினர் உள்பட அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களிடமும் எழுத்துப்பூர்வமாக கடிதம், கையெழுத்து பெற்றுள்ளோம். 

அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளனர். மேலும் விடுப்பு கொடுத்தோரையும் பணிக்கு வருமாறு அறிவுறுத்தி உள்ளோம். பெரிய அளவில் பாதிப்பில்லை  என்றார்.     
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com