தூத்துக்குடி: போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலைநிறுத்ததை அடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் 70 சதவீத அரசு பஸ்கள் இயங்கவில்லை. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை உடனடியாக நடத்தி முடிக்க வேண்டும், ஓய்வு பெறும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியத் தொகை வழங்க வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொ.மு.ச சி.ஐ.டி.யு உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்கள் இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து வழக்கமாக 64 அரசு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் தற்போது வரை 9 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி நகரில் இருந்து தூத்துக்குடி, நெல்லை , மதுரை, தென்காசி, சங்கரன்கோவில், ராஜபாளையம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புறங்களுக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் முற்றிலுமாக இயங்கவில்லை. இதனால் கிராமப்புற மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வெளியூரிலிருந்து வந்த கிராம மக்கள் கிராமத்திற்கு செல்ல பஸ் இல்லாத காரணத்தினால் நீண்ட நேரம் தங்கள் குழந்தைகளுடன் பஸ்நிலையத்தில் காத்திருந்தனர்.
சிலர் ஆட்டோவிலும், கிராமங்களை கூடிய இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு செல்லக்கூடிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். இன்று முகூர்த்த நாள் என்பதால் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது. மேலும் கிராமங்களில் இருந்து வரக்கூடிய பள்ளி கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.