கம்பம்: தேனி மாவட்டம் கம்பம், குமுளி பகுதிகளில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக 40 சதவீத பேருந்துகள் மட்டும் வியாழக்கிழமை இயங்கின.
ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
வழக்கமாக கம்பம் போக்குவரத்து பணிமனை 1இல் 38 பேருந்துகளும்,பணிமனை 2இல் 68 பேருந்துகள் இயக்கப்படும்.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 40 சதவிகித பேருந்துகள் மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, பணிமனை 1- இல் 13 பேருந்துகள், பணிமனை 2-இல் 26, குமுளியில், 14 பேருந்துகளில் 2 பேருந்துகள் மட்டுமே அதிமுக தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் மூலம் இயக்கி வருகின்றனர்.
தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.