கோவை: போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கோவையில் 40 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன.
ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கோவை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இயக்கப்படால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள்.
அந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. வழக்கமாக கோவை கோட்டத்தில் 3000 நகரப் பேருந்துகள், 1500 வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 40 சதவிகித பேருந்துகள் மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டு வருகின்றன.
அதிமுக தொழிற்சங்கமான ஏபிடி தொழிற்சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஊழியர்கள் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். தனியார் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டு வருகின்றன.