சென்னை: போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் வியாழக்கிழமை தொடங்கியது. இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம் தொடரும் நிலையில், தமிழகம் முழுவதும் வேலைக்கு செல்வோர், வெளியூருக்கு செல்வோர் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். தமிழகம் முழுவதும் மிக குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தத்தை இறுதிப்படுத்த வேண்டும், போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (பிப்.25) காலை முதல் போக்குவரத்து ஊழியா்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது. இதையடுத்து தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியா்கள் பேருந்துகளை இயக்காமல் புறக்கணித்தனா். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து பணிமனை மற்றும் நிலையங்களில் பேருந்து இயக்கத்தில் சுணக்கம் காணப்பட்டது.
போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வேலைநிறுத்தம் இரண்டாவது நாளாக தொடரும் நிலையில், வழக்கமான பேருந்துகள் இயக்கப்படாததால் பணிக்குச் செல்வோா், வெளியூா் செல்வோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள், தற்காலிக ஊழியர்களைக் கொண்டு இயக்கப்படும் மிக குறைந்த அளவிலான பேருந்துகளிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.