மானாமதுரை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிமக விழா
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தாயமங்கலம் ரோட்டில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிமக விழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.
ஆயிர வைசிய மஞ்சப்புத்தூர் செட்டியார் சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாசிமகத் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற தெப்ப உற்சவத்தை முன்னிட்டு உற்சவர் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதன்பின் அம்மன் பல்லக்கில் புறப்பாடாகி வீதிகளில் உலா வந்தார்.
பின்னர் கோவிலுக்குச் சென்றடைந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் அங்குள்ள தெப்பக்குளத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த தெப்பத் தேரில் எழுந்தருளினார்.
அதைத்தொடர்ந்து நிலவு வெளிச்சத்தில் தேர் தெப்பக்குளத்திற்குள் மூன்று முறை வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து தெப்ப உற்சவத்தைக் கண்டு தரிசித்தனர். ஏராளமான பெண்கள் தெப்பக்குளத்தில் தங்களது வேண்டுதல் நிறைவேற அகல் விளக்குகளை ஏற்றி வைத்து வைத்து வழிபட்டனர்.