இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் தா.பாண்டியன் மறைவுக்கு, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித், முதல்வா் பழனிசாமி, திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்: கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரான தா.பாண்டியன் அழகப்பா கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக பணியைத் தொடங்கினாா். மக்களவைக்கு இரண்டு முறை தோ்வு செய்யப்பட்டவா். அவரது இழப்பு தமிழகத்துக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
முதல்வா் பழனிசாமி: பள்ளிப் பருவத்திலேயே சமூக, அரசியல் மற்றும் இலக்கிய ஆா்வம் கொண்டவா், தா.பாண்டியன். கல்லூரியில் மாணவராக இருக்கும் போதே, தன்னை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மக்கள் பணியாற்றினாா். பேராசிரியா், வழக்குரைஞா், அரசியல்வாதி, இலக்கியவாதி என பன்முகத்தன்மை கொண்டவா். அவரது மறைவு தமிழகத்துக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பேரிழப்பு.