சோனியா காந்திக்கு ராகுல் காந்தியை நாட்டின் பிரதமராக்குவதிலும், மு.க. ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்குவதிலும்தான் அக்கறை இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமரிசித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள அமித் ஷா விழுப்புரத்தில் நடைபெறும் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அந்தக் கூட்டத்தில் அவர் பேசியது
"நாட்டின் பழமையான மற்றும் இனிமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில் பேசமுடியாதது வருத்தமளிக்கிறது. அதற்காக மன்னிப்புக் கோருகிறேன்.
தமிழகத்தில் ஒருபுறம் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏழைகளின் நலன்கள் குறித்து சிந்திக்கிறது. மறுபுறம் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஊழல் மற்றும் பிரித்தாளும் அரசியலைச் செய்கிறது.
ராகுல் காந்தியைப் பிரதமராக்குவது குறித்து சோனியா காந்தி கவலை கொள்கிறார். உதயநிதியை முதல்வராக்குவதுதான் ஸ்டாலினுக்கு அக்கறையாக உள்ளது.
ரூ. 12 லட்சம் கோடி ஊழலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. அந்த நேரத்தில் திமுக காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தது.
தமிழகத்தில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி என மூன்று ஜி -க்களும் உள்ளன. 2ஜி என்றால் மாறன் குடும்பத்தின் 2 தலைமுறைகள். 3ஜி என்றால் கருணாநிதி குடும்பத்தின் 3 தலைமுறைகள். 4ஜி என்றால் காந்தி குடும்பத்தின் 4 தலைமுறைகள்" என்றார் அமித் ஷா.