சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே உள்ள பகுதிகளில் தமிழகரசின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்டுள்ள ரொக்கம் ரூ.2,500 உடன் பொங்கல் பரிசு தொகுப்புகளை பொதுமக்கள் நியாயவிலைக் கடைகளில் பெறுவதற்கான டோக்கனை பொதுமக்களுக்கு வழங்கும் பணியில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகரசு அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்கம் ரூ.2,500 உடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பினை ஜனவரி 4ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அதனையடுத்து சங்ககிரி வட்டத்தில் உள்ள 48 முழு நேரமும், 87 பகுதி நேரக் கடைகள் உள்பட மொத்தம் 135 ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்கும் 73,000 பேருக்கு அரசு அறிவித்துள்ள ரொக்கம் மற்றும் பரிசு தொகுப்பினை வழங்குவதற்காக டோக்கன்கள் விநியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெள்ளிக்கிழமை சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட காவேரிப்ட்டி ஊராட்சியில் உள்ள வட்ராம்பாளையம், ஒக்கிலிப்பட்டி, தண்ணீர்தாசனூர், சென்றாயனூர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பொருள்கள் பெற்றுவரும் 2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர்கள் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்கும் பணிகளில் அந்தந்த ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்கே சென்று பணியாளர்கள் டோக்கன் வழங்கி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.