தமிழகத்தில் சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மொத்தம் 17 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை (ஜன.2) தொடங்கி நடைபெற்று வருகிறது.
கரோனா தடுப்பூசி ஒத்திகை மாநில அளவில் அனைத்து வசதியும் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 17 இடங்களில் நடைபெறும் என அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளுர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துமனை, திருமழிசை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நேமம் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை சனிக்கிழமை தொடங்கியது.
இதில், திருவள்ளூர் அருகே நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா ஒத்திகை முகாமை சுகாதார துணை இயக்குநர் பிரபாகரன் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பதிவு செய்யும் இடம், கணிப்பொறியில் சரிபார்ப்பு, தடுப்பூசி அளிக்கும் இடம் மற்றும் மேற்பார்வை அறை ஆகியவைகளை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் 25 பேருக்கு கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. முதலில் ஆதார் அட்டை சரிபார்த்தல், பிறகு கணினியில் பெயர் உள்ளதா என்று சரி பார்த்தல் பிறகு அவர்களுக்கு தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பிறகு அவர்கள் மேற்பார்வை அறையில் தங்க வைக்கப்பட்டனர். அரை மணி நேரம் கழித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்
இதில், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சதீச்குமார், டாக்டர் பிரதீபா ஆகியோர் பங்கேற்றனர்.