தம்மம்பட்டியில் நடைபெறும் கபடி போட்டிக்கு, வந்த பெண்கள் அணி பயிற்சியாளர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம், தேவம்பாளையம், பசுங்கரையைச் சேர்ந்த சங்கரின் மகன் தங்கமணிதாஸ் (50). இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்தார். கபடிக்கு பயிற்சி மையமும் நடத்தினார். அதில், பள்ளி, கல்லூரியில் படிக்கும் 20 மாணவிகளுக்கு பயிற்சி அளித்தார். அவர்களை, பரிசுக்கோப்பையுடன் நடக்கும் கபடிப் போட்டிகளுக்கு, தன்னிடம் பயிற்சி பெறும் மாணவிகளை அழைத்துச் சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் நடைபெறும் பெண்கள் கபடிப் போட்டிக்கு, 20 மாணவிகளை அழைத்து வந்தார். இன்று ஜன.2ந் தேதி காலை, கபடிப் போட்டி நடைபெறும் போது, பயிற்சியாளர் தங்கமணிதாசுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்தார்.
உடனிருந்தவர்கள் அவரை, உடனடியாக, தம்மம்பட்டி ஆரம்ப சுகாதாரநிலையம் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவர் முன்பே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். போட்டிக்கு மாணவிகளை அழைத்து வந்த நிலையில், அணியின் பயிற்சியாளர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.