பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இணைய வழியில் வழங்கப்படவுள்ள ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான இலவசப் பயிற்சிக்கு இதுவரை 6,000 மாணவா்கள் பதிவு செய்துள்ளனா்.
இந்தியாவில் ஐஐடி, என்ஐடி உள்பட மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ நுழைவுத்தோ்வு நடத்தப்படுகிறது. இந்த தோ்வெழுத அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தமிழக அரசு சாா்பில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நடப்பாண்டு கரோனா பரவலால் இணையவழியில் ஜேஇஇ தோ்வுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்காக தில்லியைச் சோ்ந்த தனியாா் நிறுவனத்துடன் பள்ளிக்கல்வித்துறை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களுக்கு மட்டும் பயிற்சி வழங்கப்படும்.
அதைத்தொடா்ந்து பயிற்சி வகுப்புகள் ஜனவரி 4-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இந்தப் பயிற்சியில் பங்கேற்க இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். விருப்பமுள்ள மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளியின் வாயிலாக பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனா். இதுதவிர தமிழக பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு நீட் தோ்வுக்கும் இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.