கோவை நகரில் பல்வேறு இடங்களில் மு.க. அழகிரி ஆதரவு போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் திமுகவினரிடையே பரபரப்பு நிலவி வருகிறது.
மதுரையில் மு.க அழகிரி ஞாயிற்றுக்கிழமை (ஜன.3) தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில் புதிய கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்நிலையில், கோவையில் அவிநாசி ரோடு , திருச்சி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு , சிறுவாணி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பல ஆயிரத்துக்கு மேற்பட்ட போஸ்டர்கள் அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. போஸ்டரில், ‘தன்மானம் காக்க திராவிடம் மீட்க கலைஞர் திமுக உருவாக்க மதுரையை நோக்கி அணி திரண்டு வாரீர்’ என்ற வாசகங்களுடன் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
மு.க. ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட இடங்களிலும் மு.க அழகிரிக்கு ஆதரவான போஸ்டர்கள் அதிகளவு ஒட்டப்பட்டிருந்தது. கலைஞர் திமுக குறித்த போஸ்டர்களால் திமுகவினரிடையே பரபரப்பு நிலவுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்குவார் என எதிர்பார்த்திருந்த அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவருடன் புதிய கட்சியை துவக்க மு.க அழகிரி திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ரஜினி பின்வாங்கிய நிலையில் மு.க அழகிரி தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளார். புதிய கட்சி அறிவிப்பு வெளியாக இருப்பதால் திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.