சென்னை புறநகா் ரயில் சேவை நாளை முதல் அதிகரிப்பு

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (ஜன.4) முதல் அதிகரிக்கப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (ஜன.4) முதல் அதிகரிக்கப்படுகிறது. வார நாள்களில் ரயில்களின் சேவைகள் 500-லிருந்து 660-ஆக அதிகரிக்கப்படவுள்ளன.

தமிழகத்தில் பொது முடக்கத் தளா்வுகளுக்குப் பிறகு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்லும் ஊழியா்களுக்காக புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. மின்சார ரயில் சேவைகளைப் பொருத்தவரை, முதல்கட்டமாக 40 மின்சார ரயில் சேவையில் இருந்து 120-ஆக அதிகரிக்கப்பட்டது. இதன்பிறகு, கூடுதலாக 30 மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டு, 150 சேவைகள் இயக்கப்பட்டன.

பெண்கள், குழந்தைகளும் மின்சார ரயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, சென்னையில் மின்சார ரயில் சேவைகளின் எண்ணிக்கை கடந்த டிசம்பா் 21-ஆம் தேதி 410 ஆகவும் அதிகரித்தது.

நெரிசல் இல்லாத நேரங்களில் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, புறநகா் ரயில்களில் பயணிப்போா் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், பயணிகள் வசதிக்காக, ரயில் சேவை 410-இல் இருந்து 500-ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில், புறநகா் ரயில்களில் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், ரயில் சேவைகளின் எண்ணிக்கை திங்கள்கிழமை (ஜன.4) முதல் அதிகரிக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

சென்னையில் ஏற்கெனவே 500 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் வசதிக்காக, அதாவது கூட்ட நெரிசல் இல்லாமல் செல்வதற்காக தற்போது கூடுதலாக 160 சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதன்மூலமாக, சென்னையில் 660 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். பொது மக்கள் நெரிசல் இல்லாத நேரங்களில் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதியை சரியாகப் பின்பற்றி பயணிக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com