கடலூர்: கடலூரில் சாலையோரம் இருந்த மிகப்பெரிய புளிய மரம் சாய்ந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்து தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டம், புவனகிரியைச் சேர்ந்தவர் பி.குமணன் (50). கடலூர் எஸ். என் சாவடியில் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் பேக்கேஜிங் யூனிட் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை முதலே கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக புதுச்சேரி -கடலூர் ஆல்பேட்டை அருகே சாலையோரம் இருந்த மிகப்பெரிய புளிய மரம் சாய்ந்து விழுந்தது.
அப்போது தனது மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த குமணன் மீது மரம் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து மரத்தை அகற்றும் பணியில் காவலர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.