தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய பகுதியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.01.21 & 08.01.21: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.01.21: தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
10.12.21: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும் பதிவாகியுள்ளது.
கேளம்பாக்கம் 21 செ.மீ மழையும், அண்ணா பல்கலைக்கழகம், தாம்பரம் தலா 16 செ.மீ மழையும், எம்ஜிஆர் நகர் 15 செ.மீ மழையும், சோழிங்கநல்லூர், டிஜிபி அலுவலகம் தலா 14 செ.மீ மழையும், பூவிருந்தமல்லி, கொரட்டூர், தரமணி, சென்னை விமானநிலையம் தலா 13 செ.மீ மழையும், பெரம்பூர் 12 செ.மீ மழையும், ஸ்ரீபெரும்புதூர் 11 செ.மீ மழையும், பூவிருந்தமல்லி 9 செ.மீ மழையும், திருவள்ளூர் 8 செ.மீ மழையும், தாமரைப்பாக்கம், சோழவரம் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.