தருமபுரி: வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி, தருமபுரியில் சிஜடியு தொழிற்சங்கத்தினர் புதன்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் பி.ஜீவா தலைமை வகித்தார். மாநிலச் செயலர் சி.நாகராசன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஜி.நாகராஜன், சி.கலாவதி,
அங்கம்மாள், சண்முகம், முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தங்களை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேரை போலீஸார் கைது செய்தனர்.