ஜனவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. இன்னும் 10 நாள்களுக்குள் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது 5 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் நிலையில், வருகிற ஜனவரி 8 ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இதற்காக 33 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நாளை 45 இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளன. 18 வயது மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு மையத்தில் 100 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 2 கோடி தடுப்பூசிகளை பதப்படுத்தி வைக்க சென்னை மத்திய மருந்து சேமிப்புக் கிடங்கில் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளைத் தடுக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.