எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பெரிய ஏரி பகுதியில், செவ்வாயன்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் நகை, பணம் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பழைய எடப்பாடியை அடுத்த பெரிய ஏரிப்பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (50), இவரது மனைவி கமலா(45), கூலித்தொழிலாளர்களான இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் செவ்வாய் அன்று இரவு, ராம்குமார் மற்றும் அவரது மகன்கள் வெளியே சென்றிருந்த நிலையில், கமலா வீட்டி சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, சமையல் எரிவாயு கசிவு ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சமையில் கூடத்தில் ஏற்பட்ட தீ வீட்டின் கூரையினை பற்றிய நிலையில், தீ பற்றிய வீட்டிலிருந்து கமலா தப்பி வெளியேறியுள்ளார். அருகில் குடியிருப்புகள் அதிகம் இல்லாததால், உரிய நேரத்தில் உதவிக்கிடைக்காத நிலையில், கூரையில் பற்றிய தீ மேலும் பரவி வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
மேலும் வீட்டின் சமையல் அறையிலிருந்த எரிவாயு உருளைகள் வெடித்ததில், தீயின் தாக்கம் அதிகரித்து, வீட்டிலிருந்த ரொக்கப்பணம், தங்கநகை மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின, மேலும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த மாட்டுவண்டியும் தீயில் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப்படை வீரர்கள் நிகழ்விடம் வருவதற்குள், வீடு முழுவதும் எரிந்துபோனது. தீ விபத்துகுறித்து, தீயணைப்புத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.