கம்பம்: தேனி மாவட்டத்திலிருந்து 10 மாதங்களுக்கு பிறகு தமிழக-கேரள எல்லை குமுளிக்கு, பேருந்துகள் புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது.
தேனி மாவட்டம் திண்டுக்கல் குமுளிக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நான்கு வழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
இதில் லோயர் கேம்பிலிருந்து குமுளி வரை உள்ள 6 கிலோ மீட்டர் மலைச்சாலையில் பணிகளின் போது இலகு ரக வாகன போக்குவரத்து தொடர்ந்து இயக்கப்பட்டதால் தாமதமாகி வந்தது.
இதனால் மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், தேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தினர் விரைந்து வேலைகளை முடிக்க, குமுளி மலைச்சாலையில் இலகு ரக வாகன போக்குவரத்தை டிச. 24 ஆம் தேதி முதல் நிறுத்த உத்தரவிட்டார்.
அதன்பிறகு மலைச்சாலையில் கல்வெர்ட் பைப் எனப்படும் சிமெண்ட் குழாய்கள் பதிக்கப்பட்டு மழைநீர் வனப்பகுதியில் செல்லும் அளவில் பணிகள் நடைபெற்றது.
இதற்கிடையில் மாற்றுப்பாதையாக கம்பத்திலிருந்து கம்பம்மெட்டு வழியாக அனைத்து வாகனங்களும் இயக்கப்பட்டது.
தற்போது பணிகள் முடிந்த நிலையில் புதன்கிழமை முதல் போக்குவரத்து இயங்க அனுமதி வழங்கப்பட்டது அதன்பேரில் இலகுரக வாகனங்கள், பயணிகள் செல்லும் பேருந்துகள் குமுளி மலைப்பாதையில் இயக்கப்பட்டது.
இதுபற்றி தேசிய நெடுஞ்சாலை ஆணையக அலுவலர் ஒருவர் கூறும்போது, லோயர் கேம்ப் குமுளி மலைச் சாலை வழியாக சில நாள்களுக்கு மட்டும் சிமெண்ட், கற்கள், மணல் கொண்டு செல்லும் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது, மற்ற வாகனங்கள் பயணியர் பேருந்துகள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றார்.
தற்போது லோயர் கேம்ப் குமுளி சாலையில் வாகனங்கள் சென்று வருகின்றன.
குறிப்பாக பொது முடக்க காலத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் பேருந்து, 10 மாதங்களுக்கு பிறகு முதன்முதலாக புதன்கிழமை முதல் குமுளிக்கு இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கு முன்னர் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் குமுளிக்கு இயக்கப்பட்டது.