பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஒருவர் கூட தப்பித்து விடக்கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.
தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அருளானந்தம், ஹெரேன்பால், பாபு ஆகிய மூவரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், 'ஆறேழு ஆண்டுகளாக - பல நூறு பெண்கள் சீரழிக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் - கூட்டாளிகளை சிபிஐ கைது செய்திருக்கிறது.
பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடைய தமது கட்சியினரைக் காத்து வருகிறது முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி.
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து, அதிமுகவினர் உட்பட தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர் கூடத் தப்பிவிட சிபிஐ அனுமதிக்கக் கூடாது. அவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்!' என்று பதிவிட்டுள்ளார்.