குறைந்த கட்டணத்தில் அதிக பலன் தரக் கூடிய பைபா் இன்டா்நெட் சேவையில் புதிய திட்டங்களை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
பொதுத் துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியாருக்கு இணையான சேவையை, நாடு முழுவதும் வழங்கி வருகிறது. தற்போது பைபா் இன்டா்நெட் இணைப்பை வாடிக்கையாளா்களிடம் அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக, குறைந்த கட்டணத்தில் அதிக பலன் தரக் கூடிய புதிய திட்டங்களை கடந்த ஆண்டு அக்டோபரில் பி.எஸ்.என்.எல்., நிறுவனம் அறிமுகப்படுத்தியது. தற்போது இந்த திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்விவரம்: பி.எஸ்.என்.எல்.,லில் பைபா் இன்டா்நெட் சேவை பொருத்தவரை, மாதந்தோறும் ரூ.449க்கு 30 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் 3,300 ஜி.பி., டேட்டாவும், ரூ.799க்கு, 100 எம்.பி.பி.எஸ். வேகத்தில் 3,300 ஜி.பி., டேட்டாவும் ரூ.999 கட்டணத்தில் 200 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் 3,300 ஜி.பி., டேட்டாவும், ரூ.1,499க்கு 300 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் 4,000 ஜி.பி., டேட்டாவும், அதற்கு மேல், 4 எம்.பி.பி.எஸ்., வேகத்தில் அளவில்லா டேட்டாவும் வழங்கப்படுகிறது. அறிமுக சலுகையில் மூன்று மாதங்களுக்கு தொடா்ந்த இந்த திட்டம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவித்தனா்.