வேலூர் வடக்கு காவல்நிலைய உதவி ஆய்வாளரின் கைத்துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் காவல்நிலைய மேற்கூரை சேதமடைந்தது. இச்சம்பவம் தொடர்பாக, உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் விசாரணை நடத்தி வருகின்றார்.
வேலூர் வடக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜசேகர், விருதம்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் ஆகியோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை பிரிவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு வடக்கு காவல்நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
அப்போது, ஜெகதீசன் தனது கைத்துப்பாக்கியை காவல் நிலைய மேஜையில் வைத்தபோது, திடீரென அந்த துப்பாக்கி பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாகத் துப்பாக்கியிலிருந்து பாய்ந்த குண்டு யாரையும் பதம் பார்க்காமல் காவல் நிலைய மேற்கூரையைத் துளைத்தது. இதனால் காவல்நிலையத்தின் மேற்கூரை கடுமையாகச் சேதமடைந்தது. இதனால், காவல்நிலையத்திலிருந்த அனைத்து காவலர்களும் பதற்றமடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து உதவி காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட்ஜான் விசாரணை நடத்தினார். இதில், துப்பாக்கியைச் சுத்தம் செய்தபோது அதிலிருந்து குண்டு தவறுதலாக வெடித்துள்ளது. விசாரணையைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளர் ஜெகதீசன் மீது துறைரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.