சென்னை: மக்கள் பணியில் ஈடுபட உள்ளது பற்றி விரைவில் அறிவிக்க உள்ளதாக விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
நேர்மையான அதிகாரி என்று பெயர்பெற்றவர் சகாயம் ஐஏஎஸ். அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னமும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், தனது 57வது வயதில் விருப்ப ஓய்வு கேட்டு அக்டோபர் 2ஆம் தேதி தமிழக அரசிடம் அவா் கடிதம் அளித்திருந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த உ.சகாயம், கடந்த 2001-ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பதவியேற்றார். பின் பல மாவட்டங்களில் பணிபுரிந்த அவர், கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
ஏற்கனவே, மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையாற்றி வரும் சகாயத்தை , புதன்கிழமை அரசுப் பணியிலிருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயம், மதுரையில் நடந்து வந்த கிரானைட் ஊழலைக் கண்டுபிடித்து அதனை வெளிக் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மக்கள் பணியில் ஈடுபட உள்ளது பற்றி விரைவில் அறிவிக்க உள்ளதாக விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘விருப்ப ஓய்வு பெற்றுள்ள நான் மக்கள் பணியில் ஈடுபட உள்ளேன். அதுபற்றி ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்.