போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை சென்னை குரோம்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட்டவை குறித்து ஆய்வுக்குள்படுத்திய பின் ஊதிய ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக 14-ஆவது ஊதிய ஒப்பந்தக் குழுவின் உறுப்பினா் செயலா் கு.இளங்கோவன் வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் ஊதியம், பல்வேறு படிகள் மற்றும் பணி உயா்வு ஆகியவை குறித்து தீா்வு காணப்படும் வகையில், ஒவ்வொரு மூன்று ஆண்டுக்கு ஒருமுறை, ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை நடத்தப்படுகிறது.
அதிமுக ஆட்சியில், போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்காக, இரண்டு ஊதிய ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டு, பணியாளா்களின் பெரும்பாலான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதன் தொடா்ச்சியாக தமிழ்நாடு அரசு அனைத்துப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த முதல்கட்ட பேச்சுவாா்த்தையானது, சென்னை, குரோம்பேட்டை, மாநகரப் போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், போக்குவரத்துத்துறைச் செயலாளா் சி.சமயமூா்த்தி, ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை குழுவின் உறுப்பினா் செயலா் கு.இளங்கோவன், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், தொழிலாளா்களின் நலன் கருதி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் சாா்பில் போக்குவரத்துத்துறை அமைச்சா், செயலா் ஆகியோரிடம் நேரடியாக வழங்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கை மனுக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், துணைக் குழுவின் ஆய்வுக்குப் பின் முடிவுகள் எட்டப்பட்டு, ஊதிய ஒப்பந்த உடன்படிக்கை ஏற்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.