வீட்டில் பெண்ணிடம் கத்திமுனையில் தாலிக்கொடி பறிப்பு: மிளகாய் பொடி தூவியும் தப்பித்த கொள்ளையர்கள் 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த பெண்ணையும், இவரது கணவரையும் கத்திமுனையில் மிரட்டிய  முகமூடி கொள்ளையர்கள்  தாலிக்கொடியை பறித்து சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏ
கொள்ளை
கொள்ளை

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்த பெண்ணையும், இவரது கணவரையும் கத்திமுனையில் மிரட்டிய  முகமூடி கொள்ளையர்கள்  தாலிக்கொடியை பறித்து சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விவசாயி நடராஜன் (வயது 77) . இவரது மனைவி சிவபாக்கியம்( 66) . இத்தம்பதியருக்கு, அருண் பிரகாஷ்(51) என்ற மகனும் இந்திரா காந்தி(50) என்ற மகளும் உள்ளனர்.  இருவரும்  வெளியூரில் வசித்து வருகின்றனர்.

விவசாயி நடராஜனும், இவரது மனைவி சிவபாக்கியமும், குறிச்சி கிராமத்திலுள்ள  தோட்டத்து வீட்டிலேயே  வசித்து வருகின்றனர். 

நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணி அளவில் நடராஜன்  வீட்டில் முன்அறையில் டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளார். சிவபாக்கியம் சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்தார். 

அப்போது முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் நடராஜன் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். இதில் ஒருவர் நடராஜன் கழுத்தில் கத்தியை வைத்து, கூச்சல் போட்டால்  கழுத்தை அறுத்து விடுவே என்று மிரட்டியுள்ளார். மற்றொருவர் சிவபாக்கியத்தை கத்திமுனையில் மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த ஏழரை சவரன் தாலிக்கொடி தங்கச்சங்கலியை பறித்துக் கொண்டனர்.

விவசாயி நடராஜன் மற்றும் இவரது மனைவி சிவபாக்கியம் இருவரையும் வீட்டினுள் அடைத்து வைத்து வெளிப்புறபுற கதவை சாத்தி தாழிட்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர்.

விவசாய நடராஜன் தனது உறவினர்களை செல்லிடப்பேசியில் அழைத்து நடந்ததை கூறி வீட்டை திறக்க சொல்லி வெளியே வந்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் சுப்பிரமணியம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகமூடி கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாமி திரைப்பட காட்சி போல கொள்ளையர்கள் முகத்தில் மிளகாய் பொடி தூவிய பெண்!

கத்திமுனையில் மிரட்டிய கொள்ளையர்கள் தங்கச் சங்கிலியை பறித்தபோது, சிவ பாக்கியத்தின் கழுத்தில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த போதும், முகமூடி கொள்ளையர்களை பிடிக்க எண்ணிய பெண் சிவபாக்கியம், சமையல் அறையில் இருந்த மிளகாய் பொடியை அள்ளி கொள்ளையர்களின் முகத்தில் வீசியுள்ளார்.

கொள்ளையர்கள் இருவரும் முகமூடி அணிந்து இருந்ததால், அவர்களது கண்களுக்குள் மிளகாய்ப்பொடி விழாததால் கொள்ளையர்கள் இருவரும் தப்பியோடிட தலைமறைவாகி விட்டார்.

சாமி திரைப்படத்தில் நடிகர் விக்ரமை,  நடிகை திரிஷா மிளகாய் பொடி தூவி பிடிப்பதைப் போல, தன்னிடம் தங்கச்சங்கிலி பறித்த முகமூடி கொள்ளையர்களை, மிளகாய் பொடி தூவி பிடிக்க முயற்சித்த பெண் சிவபாக்கியத்திற்கு வாழப்பாடி போலீசார் பாராட்டு தெரிவித்தனர். 

தனிப்படை அமைத்து முகமூடி கொள்ளையர்களை விரைவில் பிடித்து, பறித்துச் சென்ற தங்கச்சங்கிலியை மீட்டுக் கொடுப்பதாக வாழப்பாடி போலீசார் உறுதி அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com