கள்ளக்குறிச்சி மாவட்டம் பாவளம் கிராமத்தில், புதன்கிழமை பெய்த கனமழை காரணமாக மழை வெள்ள நீரில் மூழ்கி 400-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியாகின.
கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தைச் சேர்ந்த பழனி, அஞ்சலை, கருத்தாபிள்ளை ஆகியோர் புதன்கிழமை மாலை வழக்கம் போல் ஆடுகளை அப்பகுதியில் உள்ள ஏரியில் மேய்த்துள்ளனர்.
அப்போது மழையின் காரணமாக பாவளம் ஊராங்கனி கிராம ஏரிக்கரை ஓரத்தில் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீடு திரும்பி உள்ளனர்.
தொடர் மழை காரணமாக ஊராங்கானி ஏரி நிரம்பியதால், இரவு தண்ணீரில் ஏராளமான ஆடுகள் அடித்து சென்றுவிட்டன. இதில் பல ஆடுகள் பட்டியிலேயே மூழ்கி இறந்து கிடந்தன.
வியாழக்கிழமை காலை இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்களான அஞ்சலை, பழனி, கர்த்தாபிள்ளை ஆகிய மூவரும் கதறி அழுதுள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் தகவலறிந்து ஆங்காங்கே கிடந்த ஆடுகளை மீட்டதில், பட்டியில் அடைக்கப்பட்ட 500 ஆடுகளும் முழுமையாக உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கோட்டாட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் அதிகாரிகள் ஏரிக்கரை பகுதியில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.